பெங்களூரு: பெங்களூருவில் பெண் டி.எஸ்.பி. ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூரு நகர சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த லட்சுமி என்பவரே உயிரை மாய்த்துக் கொண்டவராவார். 33 வயதான இவர் கடந்த 2014ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இரவு உணவுக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற லட்சுமி, சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மிக நேர்மையான அதிகாரியாக கண்டறியப்பட்ட லட்சுமியின் இந்த துயர முடிவிற்கு பணி நெருக்கடி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் பெண் டி.எஸ்.பி. மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.