சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் எஸ். துரைசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டது. திமுக அரசின் கோரிக்கையை ஏற்று 2008ல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கி, அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு ‘’கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’’ வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது கடந்த 2010ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.ஆனால், தற்போது அந்த விருதுகள், வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து விருதுகளையும், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் செம்மொழித் தமிழாய்வு இயக்குனர், மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.