மதுரை: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வி.புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் குப்புசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதி 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சொத்து வரி உள்ளிட்டவற்றின் மூலம் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாததால், ஊராட்சிகளின் வளர்ச்சிப்பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சுகாதார பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. நிதி நெருக்கடியால் ஊராட்சியின் செயல்பாடே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஊராட்சிகளின் நலன் கருதி கடந்தாண்டு வழங்கியதைப் போல இந்தாண்டுக்கும் தேவையான நிதியை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.