×

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை: சென்னை, திருப்பூர் எலைட் டாஸ்மாக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னை, திருப்பூர் நகரங்களில் செயல்பட்டு வரும் எலைட் டாஸ்மாக்  கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழக லிமிடெட்(டாஸ்மாக்) நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் 83 எலைட் விற்பனை நிலையங்கள் அமைத்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் எழும்பூர்,  கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அயனாவரம், வேளச்சேரி, அண்ணாசாலை, ராயப்பேட்டை, வடபழனி, தாம்பரம், கோடம்பாக்கம் மற்றும் பீனிக்ஸ் மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் என 31 எலைட் கடைகள்  செயல்பட்டு வருகிறது.

 இந்த எலைட் கடைகள் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எலைட் மதுக்கடையில் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகளவில் விற்பனை  செய்யப்படுவதால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதேநேரம் மது பிரியர்கள் ஆன்லைன் மூலம் எலைட் கடைகளில் மதுபானங்கள் வாங்கி வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அடுத்தடுத்து வருவதால் டாஸ்மாக் பார்களில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இடைத்தரகர்கள் டாஸ்மாக் மேலாளர், கண்காணிப்பாளர்கள் துணையுடன்  மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இடைத்தரகர்கள் அதிக அளவில் எலைட் பார்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. அதேநேரம், குறிப்பிட்ட சில மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த நிலையை விட கூடுதலான விலைக்கு  இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து மது பிரியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் அளித்தனர். அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவகுமார் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் அதிக மதுபானங்கள் விற்பனை  செய்யப்படும் எலைட் கடைகளான அமைந்தகரை, அயனாவரம், வேளச்சேரி பீனிக்ஸ்மால், அல்சா மால், எழும்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கடைகளில் நேற்று இரவு 10 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த  சோதனை இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இந்த சோதனையின் போது, டாஸ்மாக் எலைட் கடைகளில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எலைட் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  எண்ணிக்கை எவ்வளவு, கடையில் இருப்பு எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அப்போது மது விற்பனையை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை  செய்யப்படுவதால் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி மது விற்பனையை காட்டிலும் அயனாவரத்தில் ரூ.5 ஆயிரம் குறைவாகவும், அமைந்தகரையில் ரூ.19 ஆயிரம் குறைவாகவும் இருந்துள்ளது.

 இது குறித்து எலைட்  ஊழியர்களிடம், அவர்கள் விற்பனை பணத்தை கையாடல் செய்தார்களா?  அல்லது மதுபானங்களை வெளிநபர்களிடம் கொடுத்து அதிக தொகைக்கு விற்பனை செய்கின்றனரா? என ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 5 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  முழுமையாக வெளியிட வில்லை. ஒரே நேரத்தில் 5 எலைட் கடை மற்றும் பார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், வர்த்தக நகரமான திருப்பூரிலும் நேற்று இரவு எலைட் மதுபான விற்பனை கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிக் பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த  எலைட் கடையில் கணக்கில் வராத ரூ.50,520 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் வழக்கத்தை விட அதிகளவில் மதுபானங்கள் இருப்பு வைத்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் எலைட் பார்கள் அனைத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tirupur ,Chennai ,Elite Tasmac , Sales in excess of the fixed price: Corruption Eradication Action Test at Elite Tasmak, Tiruppur, Chennai
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...