கொல்கத்தா: பிரணாப் முகர்ஜியின் புத்தகம் வெளியீட்டில் அவரது மகனுக்கும், மகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ‘பப்ளிசிட்டி’க்காக இப்படி செய்ய வேண்டாம் என்று சகோதரனுக்கு சகோதரி அறிவுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி எழுதிய ‘தி பிரஸிடெண்டியல் இயர்ஸ்’ என்ற புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புத்தக குறிப்பின் சில பக்கங்கள் ஏற்கனவே வெளியானது. அதில், காங்கிரஸ் கட்சிக்கும் அதன் மூத்த தலைவர்களுக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தது.
பிரணாப் முகர்ஜி மறைந்த போதும், அவரது குறிப்புகள் அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வசமே இருந்தன. அதனால், அந்த புத்தகத்தை ஷர்மிஸ்தா வெளியிட உரிமை கோரி வருகிறார். ஆனால் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, ‘இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பாக முழுமையாக தாம் படித்து பார்க்க வேண்டும்; அதுவரை இதனை வெளியிடக் கூடாது’ என ரூபா பதிப்பகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனை தனது விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த டுவிட்டுகள் மூலமாகவும் வலியுறுத்தி இருந்தார். அதில், ‘தந்தை உயிருடன் இருந்திருந்தாலும் இதனையே செய்திருப்பார்’ என்றும் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு அபிஜித் முகர்ஜியின் சகோதரியான ஷர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘தந்தையின் குறிப்புகளை புத்தகமாக வெளியிடுவதற்கு அபிஜித் முகர்ஜி முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது; தேவையற்ற பப்ளிசிட்டிக்காக இப்படி செய்யக் கூடாது. இந்த புத்தகத்தை வெளியிட எனக்கு தந்தை அனுமதித்து இருந்தார்’ என்று கடுமையாகவே சாடியிருக்கிறார். புகழ்பெற்ற தலைவரின் குடும்பத்து சகோதரன், சகோதரி இருவரும் பொதுவெளியில் மோதிக் கொள்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.