தங்கவயல்: விஸ்ட்ரான் நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மாவட்ட கலெக்டர் தலையிட்டு பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தங்கவயல் நகர தலைவர் வழக்கறிஞர் ஜோதி பாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, விஸ்ட்ரான் தொழிற்சாலையில் சட்டத்தை கையில் எடுத்து நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டிக்கின்றோம். அதே நேரத்தில் எட்டு மணி நேர பணிநேரம் என்ற விதியை மீறி 12 மணிநேரம் என தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கிய நிறுவனம், தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் மீது பழி போட்டு ஏமாற்றியது ஏன்? தொழிலாளர்களின் உழைப்புக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மாவட்ட கலெக்டர் தலையிட்டு பெற்று தர வேண்டும்.
கோலார் மாவட்டம் முழுவதும் இருந்து பணிக்கு சென்ற தொழிலாளர் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். மக்களால் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் தரப்பு நியாயத்தையும் பேச வேண்டும். இந்த வன்முறை கலவரத்தை அனைத்து தரப்பில் இருந்தும் ஆய்வு செய்ய வேண்டும். வெளி நாட்டு பெரு முதலாளிகளின் போட்டியா?,அரசியல் சதியா? சமுக விரோதிகளின் ஊடுருவலா? கோலார் மாவட்டத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தொழிற்சாலையை மூட செய்ய நடந்த சதியா? என்று விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடிவில்தான் உண்மை வெளியே வரும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டு நீதி பெற்று தரும் என்றார்.