பெங்களூரு: போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ₹9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அதிகாரி ராஜேஷ் தெரிவித்தார். பெங்களூருவில் தனது அலுவலகத்தில் இது தொடர்பாக ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநில போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களை நேரடி அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நான்கு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதே போல் 23 பஸ்சுகள் மீது கற்கள் வீசியதால் பஸ்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நான்கு நாட்கள் 120-130 பஸ்கள் இயக்கப்பட்டது. போராட்டம் கைவிடப்பட்ட பின் 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.
மைசூருவுக்கு ரூ.3.20 கோடி இழப்பு: இதே போல் மைசூரு மாவட்ட கே.எஸ்.ஆர்.டி.சிக்கு ரூ.3.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மாவட்ட போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி மைசூரு மாவட்டத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டதால் ரூ.2.40 கோடியும், நகர பேருந்து சேவை பாதிக்கப்பட்டதால் ரூ.80 லட்சமும் கே.எஸ்.ஆர்.டி.சிக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மைசூரு மாவட்ட போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.