ெபங்களூரு: விஸ்ட்ரான் கம்பெனியில் நடந்துள்ள கலவரம் சாமானியமாக கருதப்பட்டாலும் தொழில் முதலீடு செய்வோருக்கு அச்ச உணர்வு ஏற்படுத்தும் என்று கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சபை மற்றும் கர்நாடக மாநில சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்க தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாநில தலைநகரமான பெங்களூருவின் பக்கத்து மாவட்டமாக கோலார் இருப்பதால், பெங்களூருவில் தொழில் முதலீடு செய்ய காட்டும் ஆர்வத்தை கோலார் மாவட்டத்திலும் காட்டுகிறார்கள். அதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 8 தொழிற்பேட்டைகளில் ரூ.7,477 கோடி முதலீட்டில் 19,261 தொழிற்சாலைகள் உள்ளது. அவற்றில் 1.60 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
கோலார் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரா, கோலார், பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல், தங்கவயல் ஆகிய தாலுகாக்களை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், பக்கத்து மாவட்டமான சிக்கபள்ளாபுரா, பெங்களூரு ஊரக மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.இதில் தைவான் நாட்டை பூர்வீமாக கொண்ட விஸ்ட்ரான் இன்போகாம் இந்தியா பிரைவெட் லிமிடெட் நிறுவனம் ரூ.3,260 கோடி முதலீடு செய்து செல்போன் தயாரிக்கும் கம்ெபனியை தொடங்கியுள்ளது. இதில் 1,343 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும் 8,483 பேர் குத்தகை அடிப் படையிலும் பணியாற்றி வருகிறார்கள். இதில் குத்தகை அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த 12ம் தேதி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் கலவரத்திற்கு காரணமாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வேம்கல் போலீசார், 149 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக விஸ்ட்ரான் தொழிற்சாலை மீண்டும் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொழிற்சாலை மூடப்பட்டால், அதில் பணியாற்றி வரும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.கலவரம் தொடர்பாக விஸ்ட்ரான் கம்பெனி அதிகாரிகளை பெங்களூரு வரவழைத்து தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் ஆலோசனை நடத்தினார். எந்த காரணம் கொண்டும் தொழிற்சாலையை மூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து டெல்லியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வருகிறார்.
இதை கர்நாடக மாநில தொழில், வர்த்தக துறை இணை இயக்குனர் சுரேஷ் உறுதி செய்தார். இதனிடையில் விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடந்துள்ள சம்பவம் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டு வருகிறது. தொழில் முதலீடு செய்வதற்கு பலர் தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த சமயத்தில் இருக்கும் தொழிற்சாலைகளை காப்பாற்றி கொள்ள வேண்டியது அவசியமாகும். சின்ன சின்ன காரணங்களை மையமாக வைத்து கலவரம் செய்வது, தொழிற்சாலைகளுக்கு சொந்தமான சொத்துகளை சூறையாடுவது போன்ற சம்பவங்கள் தொழில் முதலீடு செய்ய முன்வருவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். கோலார் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் முதலீடு செய்யாமல் பின் வாங்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் பெரிக்கல் எம்.சுந்தர் மற்றும் கர்நாடக மாநில சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்க தலைவர் கே.பி.அரசப்பா ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.விஸ்ட்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து டெல்லியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வருகிறார்.