சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா கொடுமையின் காரணமாக மக்கள் வருமானத்தை இழந்து, வாங்கும் சக்தியை இழந்து, வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 100 விலை ஏற்றப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 610ல் இருந்து 710 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 உயர்த்துவதை உடனடியாக மத்திய பாஜ அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடவில்லையெனில், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண்களின் சார்பாக, பாஜ அரசுக்கு எதிராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் விரைவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.