டெல்லி :இந்தியாவிற்கு வலிமையான, ஒளிமிக்க அடித்தளத்தை அமைத்துத் தந்தவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் நந்தட் மாவட்டத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்த வல்லபாய் பட்டேல், இந்தியாவின் 562 சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், முதல் துணை பிரதமராகவும் விளங்கினார். இவர் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி மரணம் அடைந்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி, அவரை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,“இந்தியாவிற்கு வலிமையான, ஒளிமிக்க அடித்தளத்தை அமைத்துத் தந்த இரும்பு மனிதர் திரு.சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, அவரது நினைவு நாளில், மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர் பாதை வகுத்தார். அவரது பணி என்றும் நம்மை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.