புதுடெல்லி: முதியவர் வீட்டில் வைர மோதிரங்கள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிய நர்ஸ் கைது செய்யப்பட்டார் கிேரட்டர் கைலாஷ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் வீடுகளைசந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது 90 வயது மதிக்கத்தக்க முதியவர் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அந்த வீடு கிரேட்டர் கைலாஷ் பகுதி 1 எம் பிளாக்கில் அமைந்துள்ளது. அங்கு இருந்த முதியவர் வீட்டில் இரண்டு வைர மோதிரங்கள் மற்றும் ரூ.1.20 லட்சம் திருட்டு போனதாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னிடம் 3 வேலைக்காரர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த 3 பணியாளர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அங்கு நர்ஸாக பணிபுரிந்து வந்த சரிதா விஹார் பகுதியை சேர்ந்த தீபக் சவுத்திரி(34) என்பவர் வைர மோதிரங்கள் மற்றும் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அந்த வீட்டில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து இரண்டு வைர மோதிரங்கள், 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.