×

600 கி.மீ. தூரத்தை 36 மணிநேரத்தில் சைக்கிளில் கடந்த ரயில்வே டிஜிபி

ராமேஸ்வரம்: சைக்கிள் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரயில்வே டிஜிபி 600 கி.மீ. தூரத்தை 36 மணிநேரத்தில் சைக்கிளில் கடந்து அசத்தினார். தெற்கு ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்ட வீரர்கள் நால்வருடன் சென்னையில் இருந்து கடந்த 11ம் தேதி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்தார். தனது சைக்கிள் பயணத்தில் சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான 600 கி.மீ. தூரத்தை 36 மணிநேரத்தில் கடந்து வந்த இவர்கள் நேராக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்தனர்.

சைக்கிள் பயணம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘உலகின் வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். சைக்கிளினால் காற்று மாசு ஏற்படாது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. வெளிநாடுகளில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்கின்றனர். சென்னையில் இருந்து 600 கி.மீ தூரத்தை 36 மணிநேரத்தில் கடந்து வந்துள்ளோம். ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் ‘ஹெல்த்தி இந்தியா, ஹேப்பி இந்தியா’ என்பதே இந்திய அரசின் திட்டமாக உள்ளது.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் உடல் நலமும், மனநலமும் உள்ளவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க சைக்கிள் ஓட்டுவது அவசியம். இதனை வலியுறுத்தவே நாங்கள் இந்த சைக்கிள் பயணத்தை துவக்கினோம்’’ என்றார்.

Tags : Railway DGP , 600 km Railway DGP who cycled the distance in 36 hours
× RELATED கொலையை கொண்டாடும் வகையில் ‘தம்ஸ் அப்’...