திருவனந்தபுரம்: களியக்காவிளையில் இருந்து சென்ற கேரள அரசு பஸ்சில் ₹20 லட்சம் பணம் மற்றும் 38 பவுன் நகைகளை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு கேரள அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அமரவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த கலாத்துறையினர் அந்த பஸ்சில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பயணி ஒருவரின் பையில் ₹20 லட்சம் பணம், 38 பவுன் தங்க நகைகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து கலால் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியை சேர்ந்த ராஜீவ் (49) என்பது தெரியவந்தது. அவர் நாகர்கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடைகளுக்கு நகைகள் விற்பனை செய்துவிட்டு ஊருக்கு திரும்பி வருவதாகவும், அதில் கிடைத்த பணம் என்று தெரிவித்தார். இருந்தாலும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் மத்திய அமலாக்கத்துறையிடமும், நகைகள் ஜிஎஸ்டிதுறையிடமும் ஒப்படைக்கப்பட்டன. அரசு பஸ்சில் இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.