டெல்லி: பீகாரை விட குறைவான மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் முதற்கட்டமாக 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் படி 50 வயதுக்கு மேற்பட்ட 26.50 கோடி பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 1 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுடன் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட 2.50 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் வாழும் உத்திரப்பிரதேசத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இந்த பட்டியலில் அங்கு 2.63 கோடி பேரும், மகாராஷ்டிராவில் 2.72 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 2.19 கோடி பேரும், உள்ளனர்.
தடுப்பூசி வழங்குவதில் தமிழகத்திற்கு 4-வது மாநிலமாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இங்கு 50 வயதுக்கு மேற்பட்ட 1.95 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தை விட பீகார் மக்கள் தொகை அதிகம் இருப்பினும் அங்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.84 கோடி பேர் மட்டுமே உள்ளனர். எனவே அந்த மாநிலத்திற்கு 5-வதாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இணை நோய்களுடன் கூடிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் அதிகம் உள்ளனர். 11-வது மாநிலமாக உள்ள கேரளாவில், 3-ல் ஒரு பங்கு மக்கள் இணை நோயுடன் கூடிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.