×

தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும், மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கபட்டு விட்டது : நீதிபதிகள் வேதனை

மதுரை : தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும், மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கபட்டுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் நீட் மற்றும் ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியலை தவிர்த்து பிற உயர் படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அதுதொடர்பான வழிகாட்டல்களை வழங்க போதுமான வாய்ப்பு இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து மேலாண்மை, சட்டம் என பல்வேறு துறைகள் உள்ளன. ஆகவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிறதுறை உயர்கல்வி தொடர்பாக தேசிய அளவிலான நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி விசாரித்தனர்.தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும், மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கபட்டு விட்டது. ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிப்பது கூட இல்லை. அரசு மட்டுமல்ல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இதுதொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம்.

வாக்குக்காக அல்லாமல் வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்த அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்து இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Tamil Nadu ,Judges ,school , Tamil Nadu, school, students, cannabis, alcohol, slave, judges, pain
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...