சென்னை: மு.க.ஸ்டாலினின் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டம் சமூக வலைதளங்களில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் ‘தமிழகம் மீட்போம்’-2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே இரண்டு கட்டங்கள் நிறைவுற்ற இந்தப் பரப்புரைக் கூட்டம் மூன்றாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் உட்பட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை அளவில் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே காணொலி வாயிலாகச் சந்திக்கும் வகையில் மாவட்ட திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பொதுக் கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காணொலி வாயிலாகப் பல்லாயிரக்கணக்கானோர் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும், முகநூல், டிவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் இந்தப் பரப்புரைப் பொதுக் கூட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு வருகின்றனர். முகநூலில் தென்னிந்திய அரசியல் தலைவர்களுள் அதிகம் பேரால் பின்தொடரப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப் பரப்புரைக் கூட்டம், சமூக வலைதளங்களின் வாயிலாக மட்டும் தற்போது வரை 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.