திருவலம்: திருவலம் அடுத்த சேர்க்காடு கிராமத்தில் மழையால் பள்ளி கட்டிடத்தின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவலம் அடுத்த சேர்க்காட்டில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது.
இதனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 மரங்கள் கட்டிடத்தின் மேல் விழுந்துள்ளது. இதுவரை மரங்கள் அகற்றப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மேலும், கட்டிடத்தின் மீது விழுந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.