திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மேலாளர் கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(48). இவர் திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. 8ம் தேதி ஆர்.எம்.காலனி சாலையில் உள்ள மின்மயானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமான நிலையில் மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது.எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பழநி ரோட்டில் உள்ள ஒரு சிசிடிவி காட்சியில் மணிகண்டன் நடந்து செல்வதும், அப்போது இருவர் அவரை டூவீலரில் அழைத்துச் சென்றதும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில், டூவீலர்களில் சென்றவர்கள் மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோச்சாபாய் (எ) சிவக்குமார்(21), பாலதிருப்பதி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் என்று தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன், பழநி ரோட்டில் செல்லும்போது சிவக்குமாரும், சிறுவனும் குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். மின்மயானம் அருகே மணிகண்டன் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டு பிளேடால் உடல் முழுவதும் வெட்டப்பட்டும், துணியால் கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். அதேபோல் அவர்கள் பயன்படுத்திய டூவீலரும் திருடப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது’’ என்றனர்.போதை பழக்கத்தால் தனியார் பள்ளி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.