கொல்கத்தா: பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிரேதே பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. இவருக்கு வயது 33. இவர் வித்யா பாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர், லவ் செக்ஸ் அன்ட் தோக்கா ஆகிய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். கொல்கத்தா ஜோத்பூர் பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 3வது மாடியில் தனியாக வசித்து வந்தார்.
அவர் தனது வீட்டு வேலைக்கு மட்டுமே ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல இன்றும் அந்த பணிப்பெண் வீட்டுவேலை செய்வதற்காக ஆர்யா பானர்ஜியின் வீட்டிற்கு வந்து வாசலில் இருந்த காலிங் பெல்லை அடித்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஆர்யா கதவை திறக்கவில்லை. உடனடியாக பானர்ஜியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார் செல்போன் அழைப்பையும் ஆர்யா எடுக்கவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கும் இது குறித்து தெரியாத நிலையில் அக்கம்பக்கத்தினரும் பணிப்பெண்னுடன் சேர்ந்து கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் ஆர்யா கதவை திறக்கவில்லை. பின்னர் சந்தேகமடைந்த பணிப்பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூட்டிய வீட்டில் நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை ஆரியாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய போலீசார்; பிரேதபரிசோதனையின் முடிவிலேயே நடியை ஆர்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் நடிகையை கொலை செய்துள்ளனரா? என்ற முழுவிவரம் தெரியவரும் என கூறியுள்ளார்.