மஞ்சூர்: மஞ்சூர் அருகே கேரட் தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுமாடு, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகளுடன் சாரை பாம்பு, கட்டுவிரியன், நாக பாம்புகள் ஏராளமாக உள்ளது. ஆனால் மலை பாம்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் அருகே உள்ள பெரியார்நகர் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டிய கேரட் தோட்டம் ஒன்றில் பெரிய மலை பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கொண்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் மஞ்சூர் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் பிஞ்சான் என்பரின் உதவியோடு மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பாதுகாப்புடன் எடுத்து சென்று பழைய வனத்துறை அலுவலகம் அருகே உள்ள அடர்ந்த காட்டில் கொண்டு விடப்பட்டது.