×

கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்த ஸ்டேட் வங்கியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை : மத்திய அமைச்சர்களுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை :: ஸ்டேட் வங்கி கிளார்க் துவக்க நிலைத் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஸ்டேட் வங்கி அளித்திருக்கிற பதில் திருப்திகரமாக இல்லை என்றும் இது குறித்து முழு ஆய்வு வேண்டுமென்றும், அது வரை பணி நியமனத் தேர்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடாது என்றும் சு.வெங்கடேசன் மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஆகியோர்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டேட் வங்கி பதில்

சு.வெங்கடேசன் எம். பி இது குறித்து மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் ஆகியோருக்கு 22.10.2020 அன்று கடிதம் எழுதியதையொட்டி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் தால்வார் சந்த் கெலாட் நிதியமைச்சகத்திற்கு அக் கடிதத்தை அனுப்பி இருந்தார். மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அதை ஸ்டேட் வங்கி தலைவருக்கு அனுப்பி சு. வெங்கடேசன் எம். பி க்கு பதில் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் (ஊழியர் உறவு) அதற்கு பதில் எழுதி இருந்தார்.

அதில்
1) ஸ்டேட் வங்கி கிளார்க் தேர்வு, துவக்க நிலை மற்றும் இறுதி தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெறும். துவக்க நிலை தேர்வில் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிடங்களை பொருத்து 10 மடங்கு போட்டியாளர்கள் இறுதித் தேர்வுக்கு அனுப்பப் படுவார்கள்.

2) அதனடிப்படையில் பொதுக் காலியிடங்கள் 171  க்கு 1713 பேரும் (கட் ஆப் - 62), ஓ. பி.சி  காலியிடங்கள் 106  க்கு 9592 பேரும் (கட் ஆப் - 62), எஸ்.சி  காலியிடங்கள் 74  க்கு 1590 பேரும் (கட் ஆப் - 62) இறுதித் தேர்வுக்காக தகுதி பெற்றுள்ளதாக பட்டியல் இட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஓ.பி.சி, எஸ்.சி பிரிவுகளில் நிறைய பேர் அந்த கட் ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளதால் 10 மடங்கிற்கும் அதிகமாக முறையே 90 மடங்கு களும், 21 மடங்கு களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பதில் இல்லாத கேள்வி

இது குறித்து சு.வெங்கடேசன் மத்திய நிதி இணை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஆகியோர்க்கு எழுதியுள்ள கடிதத்தில்,

1) எனது கடிதத்தில் எழுப்பி இருந்த கேள்வி எண் 5:  எத்தனை ஓ. பி சி, எஸ்.சி, எஸ்.டி, இ.டபிள்யு.எஸ் பிரிவினர் தற்போது வெளியிடப்பட்டுள்ள பொதுப் பட்டியலில் இடம் பெற்றி ருக்கிறார்கள் என்பதற்கு பதில் இல்லை. இது மிக முக்கியமான கேள்வியாகும்.

2) ஸ்டேட் வங்கி தந்துள்ள பதில் இட ஒதுக்கீட்டு கோட்பாடு இப் பட்டியல் தயாரிக்கப்படுவதில் முறையாகக் கடைப் பிடிக்கப்படவில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

3) பொதுப் பட்டியல் தயாரிக்கப்படும் போது எல்லாப் பிரிவு போட்டியாளர்களும்  கணக்கில் கொள்ளப்பட்டு அதிக மதிப்பெண்கள் வரிசையில் அவர்களை அப்பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். பின்னர் ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும். பொது என்பதையே ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி போன்று தனித் தொகுப்பாக அணுகுவது தவறு. இது பொதுப் பட்டியலிலும் இடம் பெறும் உரிமையை ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இடமிருந்து தட்டிப் பறிப்பது ஆகும்.

4) ஸ்டேட் வங்கியின் பதில் கடிதத்திலேயே ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கு மதிப்பெண் சலுகை இறுதி தேர்வில்தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த துவக்க நிலைத் தேர்வில் அந்த சலுகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

5) இப்படிப்பட்ட நிலையில் பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் இருக்க வாய்ப்பே இல்லை. பொதுப் பட்டியல் என்பது இட ஒதுக்கீட்டு பிரிவினரை தவிர்த்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகவே இருக்க முடியும். இது முற்றிலும் விதி மீறல் ஆகும். துவக்க நிலைத் தேர்வோ, இறுதித் தேர் வோ இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டிற்கும் ஒன்றே; அவை மாற இயலாது.
சு.வெங்கடேசன் கோரிக்கை

6. ஆகவே ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு அடிப்படை அம்சங்கள் கடைப் பிடிக்கப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்கிற வரை பணி நியமனங்களில் அடுத்த கட்டம் நோக்கி நகராமல் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

இப் பிரச்சினையில் உடனடியாக உரிய தலையீட்டை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், ஸ்டேட் வங்கி தலைவரை சு.வெங்கடேசன் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

Tags : State Bank ,OBC ,SC ,S. Venkatesh , Clark, Union Ministers, M.P. S. Venkatesh, Letter
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...