சிங்கம்புணரி: பிரான்மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு ஆகாயம், மத்திபம், பாதாளம் என 3 நிலைகளில் சிவன் காட்சியளிக்கும், மங்கைபாகர் - தேனம்மை கோயில் உள்ளது. ஔவையார், கபிலரால் புகழ்பெற்ற தலமாக இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
கோயிலின் பின்புறம் 2,500 அடி உயர மலை உள்ளது.
இம்மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள், பெரிய வீடு, சின்னநாளி குன்று, மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் தற்போது அதிகளவில் பூத்துள்ளன. இப்பூக்களை காண சுற்றுலாப்பயணிகள், மலையேற்ற ஆர்வலர்கள் அதிகளவில் வருகின்றனர். குறிஞ்சித்தேன் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுவதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் குறிஞ்சி பூக்களை ரசித்து வருகின்றனர்.