சென்னை: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து, அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னையில் அனைத்து மருத்துவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஏற்கனவே இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கும் அரசு செவிசாய்க்காத நிலையில் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உயிர்காக்கும் சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் அளிப்பதில்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவர்கள் உள்பட பல்வேறு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 1500 மருத்துவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 700 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மதுரை, விருதுநகர், கோவை போன்ற மாவட்டங்களில் பணிபுரியும் மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசு உடனடியாக உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.