கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கன மழை காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. தமிழக அரசு எவ்வளவு நிவாரணம் அறிவிக்க போகிறது என்பதை இன்னும் சொல்லவில்லை. வீடு இடிந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க போவதாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது. வீடு இழந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். அதே நேரத்தில் மழைநீர் எந்தெந்த வீடுகளுக்கு சென்றதோ அவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். கன மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றார்.