திருச்சி: திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம், மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் உப்பிலியாபுரம், மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மாலை அதிரடியாக உள்ளே புகுந்து கதவை இழுத்து பூட்டினர். இதனால் அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பீதியில் உறைந்தனர்.
சார்பதிவாளர் மற்றும் ஊழியர்களின் மேஜை மற்றும் அறை உள்ளிட்ட இடங்களில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இதில் உப்பிலியாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளே கேட்பாரின்றி இருந்த ரூ.81,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மணப்பாறை சார்பதிவாளர் புலிபாண்டியன் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ. 1 லட்சம் சிக்கியது. போலீசார், சார்பதிவாளர்கள் சரண்ராஜ், புலிபாண்டியன் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.