சென்னை: சட்டவிதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி சோழிங்கநல்லூரில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கை எவற்றிற்கும் செவிசாய்க்காத தமிழக அரசை கண்டித்தும் சென்னை ெதற்கு மாவட்ட திமுக சார்பில் சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.எ.மதியழகன் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “மாநகராட்சி விதிப்படி சுமார் 10 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் சுங்கச்சாவடிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த எட்டு சுங்க சாவடிகளும் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே செயல்படுகின்றன. இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டு இருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் எழுச்சியை பார்த்தாவது உடனடியாக சுங்கச்சாவடிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை மூடும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார். தயாநிதி மாறன் எம்பி அளித்த பேட்டி:கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு செலவு செய்யாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தேவையற்ற நடவடிக்கை.
ஊராட்சி பகுதிகளாக இருக்கிற போது அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும் அகற்றப்படாமல் தமிழக அரசு சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களை சுரண்டுகிறது. முதல்வர் பதவியில் இருக்கிற போதே சிறைக்கு சென்ற தலைவரை கொண்டிருந்த கட்சி அதிமுக. தமிழக அரசை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் மிரட்டுகிறார்.இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.ேக.நகர் தனசேகரன், மகேஷ்குமார், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் அடையாறு சபீல், ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ப.ரவி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சோழிங்கநல்லூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடம்
சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் “Dont Want TollGate என்ற “ஹேஷ்டேக்” டிரெண்டிங் ஆனது. இந்த ஹேஷ்டேக் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை டிவிட்டரில் 70 ஆயிரம் டிவிட்டுகளை கடந்து இந்திய அளவில் பிரபலமாகி முதல் இடத்தைப் பிடித்தது.