திருப்பதி: கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் 300 ரூபாய் ஆன்லைன் புக்கிங் டிக்கெட்கள் மூலமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அர்ச்சகர்கள் உயிரிழந்ததால், கோயில் நடை மூடப்பட்டது. அதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி முதல் திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் வருகைக்கு ஏற்ப டிக்கெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால், திருப்பதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி வர திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.