விருதுநகர் : விருதுநகரை ஒட்டி உள்ள பாவாலி ஊராட்சியில் கலைஞர் நகர், அய்யனார் நகர், சந்திரகிரிபுரம், சங்கரநாராயணபுரம், பராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடங்கி உள்ளது. பாவாலி ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.
பராசக்தி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, தெருவிளக்குகள், வாறுகால் வசதி, அடிகுழாய், தண்ணீர் தொட்டி வசதி என எதுவும் இல்லை.
20 நாட்களுக்கு ஒரு முறை தெருக்களில் உள்ள குழாய்களில் குடிநீர் விடப்படுகிறது. தெருவிளக்குகள், சாலை வசதிகள் இல்லாத நிலையில் குடியிருப்புகளை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் பகல், இரவு நேரங்களில் பாம்பு, விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல அச்சப்படும் சூழல் தொடர்கிறது.
மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. குப்பைகளை அகற்ற, குப்பை வாங்க பணியாளர்கள் வருவதில்லை. சாலை, தெருவிளக்கு, தெருக்குழாய்கள், வாறுகால் வசதி செய்து தரவேண்டுமென பராசக்தி நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.