சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த 7 அடி பாம்பை, சிறப்பு எஸ்ஐ தைரியமாக பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் உலகம்பட்டி காவல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு நுழைந்தது. அப்போது பணியில் இருந்த முதல்நிலை காவலர் பிரபாகரன், பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சிறப்பு எஸ்ஐ சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிறப்பு எஸ்ஐ சக்திவேல் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பதுங்கியிருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். பின்னர் அதனை உலகம்பட்டி மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
சிறப்பு எஸ்ஐ சக்திவேல் பயப்படாமல் 7 அடி பாம்புடன் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.