ஆண்டிபட்டி: சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்கு நேற்று வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட தயாராக உள்ளது. இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கட்சி பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார். கிளைமாக்சில் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவர், புரெவி புயல் தாக்கத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும், குறையும் உள்ளது. . நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் வெள்ள நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இதை சீரமைக்கும் கடமை அரசுக்குதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.