சென்னை: 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் கூறியுள்ளார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது, பிரசார பணிகளுக்கு தயாராவது உள்ளிட்ட உயர்மட்ட வியூகங்களை வகுப்பதில் கட்சிகள் முனைப்புடன் உள்ளன. தமிழகத்தில் அதிமுக கட்சியுடன் தற்போது தேமுதிக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபைக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படும். அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார் எனவும் கூறினார். இன்று நாகையில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க நேரில் சென்ற பிரேமலதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.