சென்னை: சென்னை தீவுத்திடல் அருகே வசிக்கும் குடிசைவாசிகளை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் முயற்சி குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் வசிப்பவர்களை அகற்றிவிட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, மாநகராட்சி 59வது வார்டில் சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் தங்களை பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், காந்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் அல்லது கேசவ பிள்ளை பூங்கா, ராம்தாஸ் நகர் போன்ற இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தீவுத்திடல் அருகே வசிக்கும் குடிசைவாசிகளை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் முயற்சி குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.