சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான புரெவி புயல் வலுவிழந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தமாக நிலை கொண்டு இருக்கிறது. இந்த புயல் வலுவிழந்த போது, பல்வேறு பகுதிகளாக சிதைந்து தென் மாவட்டங்களில் பரவியது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பழவிடுதி (கரூர்) 5 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம், வேப்பந்தட்டை, சோலையார், வைகை அணை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு; பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.