×

வீர வரலாறு பொதிந்த ஜில்லா! கோவூர்நாடுதான் நம்ம ஊத்தங்கரை

‘‘நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ் நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக்,’’

ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடிய  ஆற்றின் கரைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊற்றின்கரை என்று அழைக்கப்பட்டு, காலத்தின் சுழற்சியால் ஊத்தங்கரை என்று அழைப்பதாக பெயர்காரணங்கள் கூறுகிறது. இப்படி வளம் பொதிந்த ஊத்தங்கரை சங்க காலத்தில் அதியமன்னர்கள் ஆட்சி செய்த தகடூர் நாட்டில் இடம் பெற்றிருந்தது.

அன்றைய காலகட்டத்தில் ‘கோவூர்நாடு’ என்ற பெயரில் ஊத்தங்கரை அழைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. இந்த கோவூர் நாடானது பின்னர் பல்லவர்கள், கங்காவம்சத்தினர், நுளம்பர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசர்கள், பிஜப்பூர்சுல்தான்கள், மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்துள்ளது.

முதலாம் மைசூர் போரின் போது, ஆங்கிலேயப்படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டணம் சென்று  ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டது. இதில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த சேலம், கர்நாடக பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதன் தொடர்ச்சியாக ‘ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை’ ஏற்பட்டது.

இதன்படி 12 கோட்டை தலங்களை உள்ளடக்கிய பாராமஹால் ஆங்கிலேயர் வசம்வந்தது. 1792ம் ஆண்டு ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக பொறுப்பு வகித்தார். அப்போது பாராமஹாலின் தலைநகரமாக விளங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஊத்தங்கரை ஜில்லா பேசப்பட்டது.

1959 ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் ஊத்தங்கரை ஒன்றியத்தில் வேங்கடதம்பட்டி, உப்பரப்பட்டி, திருவனப்பட்டி, சின்கேரபட்டி, ரெட்டிபட்டி, பெரியதாழ்பாடி, பெரிய கொட்டகுளம், பாவக்கல், நொச்சிப்பட்டி, நாயக்கனூர், நடுப்பட்டி, மூங்கிலேறி, மூன்றம்பட்டி, மிட்டபள்ளி, மேட்டுதங்கள், மரம்பட்டி, மகநூர்பட்டி, கொண்டம்பட்டி, கீழ்மதூர், கீழ்குப்பம், காட்டேரி, கருமந்தப்பட்டி, காரப்பட்டு, கல்லாவி, கடவாணி, கோவிந்தபுரம், கெங்கபிரம்பட்டி, ஈகூர், சந்திரபட்டி, படப்பள்ளி, அத்திப்பாடி, புதூர்புங்கனி, வீரனகுப்பம், வெல்லகுட்டை என்று 34 ஊராட்சிகள் உள்ளது.

1969 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியானது. இதற்கு 2ஆண்டுகளுக்கு முன்பே, 1967ம் ஆண்டு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுத்தொகுதியாக இருந்து தற்போது தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அன்றைய டி.டி.கவுண்டர், கே.ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து இன்றைய மனோரஞ்சிதம் வரை பலரது குரல்கள், மக்களுக்காக சட்டமன்றத்தில் ஒலித்துள்ளது.

புராதனச்சிறப்புகளோடு வரலாற்று  பெருமைகள் கொண்ட ஊராக ஊத்தங்கரை திகழ்கிறது. பலதரப்பட்ட உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியாக திகழ்ந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக கல்வியில் கவனம் ஈர்க்கும் பகுதியாக ஊத்தங்கரை திகழ்கிறது. பிரசித்தி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியாளர்களின் கவனம் ஈர்த்து நிற்கிறது.

அதே நேரத்தில் அரசு பள்ளிகளும் களத்தில் நின்று தேர்ச்சி விகிதத்தில் ஆண்டு தோறும் புதிய சாதனை படைத்து வருவது  பெருமைக்குரியது. நகரத்தின் சாயல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும் கிராமங்கள் சூழ்ந்த ஊராகவே ஊத்தங்கரை உள்ளது. இதை கவனத்தில் கொண்டு மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினால் ஊத்தங்கரையின் கொடி மேலும் உயரப்பறக்கும் என்பது  ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கை.

Tags : District ,homeland ,Govurnadu , Uthangarai
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...