நாக்பூர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் தாயாரிடம் இருந்து ரூ.2.50 கோடியை ஏமாற்றிய உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். நாக்பூரில் ஆகாஷ்வானி சதுக்கம் அருகே மிகப்பெரிய காலிமனை உள்ளது. இந்த மண்டபம் மூலம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேயின் தாயார் முக்தா பாப்டே திருமணம் போன்ற விஷேசங்களுக்கு வாடகை விட்டு பணம் ஈட்டி வருகிறார். முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக அவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை என்பதால், தபாஸ் கோஷ்(வயது49) என்பவரை அந்த சொத்துக்களை கண்காணிப்வராக கடந்த 2007-ல் முக்தா பாப்டே நியமித்தார். திருமண மண்டபம் முன்பதிவு அடிப்படையில் அவருக்கு ஊதியமும், கமிஷனும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து முக்தா பாப்டேயின் வங்கிக்கணக்கில் போதுமான வாடகை பணத்தை தபாஸ் கோஷும் அவரின் மனைவியும் டெபாசிட் செய்யவி்ல்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து முக்தா பாப்டே கேள்வி எழுப்பியபோது, இடம் புக்கிங் ஆகவில்லை உள்ளிட்ட ஏதாவது காரணங்களைக் கூறி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. எனவே கொரோனா பரவலை காரணம் காட்டி யாரும் விஷேசங்களை நடத்தவில்லை என கூறியுள்ளார். அந்த முன்பதிவு பணத்தையும் தபாஸ் கோஷ் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கடந்தஆகஸ்ட் மாதம் முக்தா பாப்டே இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸிடம் தபாஸ் கோஷ் குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து, போலீஸ் துணை ஆணையர் வினிதா சாஹு தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து முக்தா பாப்டேவை, தபாஸ் கோஷ் ஏமாற்றியது தெரியவந்தது. அவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தாமல் பல்வேறு போலிக் கணக்குகளை காட்டி தபாஸ் கோஷும் அவரின் மனைவியும் ஏமாற்றியதும், போலி பில்கள்அச்சடித்து வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தபாஸ் கோஷ் அவரின் மனைவியும் சேர்ந்து ஏறக்குறைய. ரூ.2.50 கோடி முக்தா பாப்டேயிடம் இருந்து ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து, சீதாபல்த் காவல் நிலையத்தில் ஐசிபி பிரிவு 409, 420, 467 ஆகிய பிரிவுகள் மீது கோஷ் மற்றும் அவரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறப்பு விசாரணைப்படை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு கோஷ், அவரின் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.