பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் ராம்நகர், ராஜேஷ் நகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் அங்குள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேறும் சகதியுமாக உள்ள வழித்தடங்களில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளை சீரமைக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.நடராஜனிடமும், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர், ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர் ராஜேஷ் நகர் சாலையில் தேங்கிய மழைநீரில் இறங்கி நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.