ராமேஸ்வரம்: புயல் காரணமாக கடந்த நவ. 30ம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அனுமதியை அடுத்து, நேற்று காலை 9 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல் மண்டபம் வடக்கு கடற்கரை மீனவர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். முன்னதாக, பாம்பன் மீனவர்கள் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றிருந்தனர். இரவு முழுவதும் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்த அவர்கள், நேற்று காலை கரை திரும்பினர். படகுகளில் டன் கணக்கில் பேசாளை மீன்களும், அதிகளவில் சாவாளை மீன்களும் பிடிபட்டு இருந்தன. மீன்களை பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் விற்பனைக்கு குவித்து வைத்தனர்.