கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி வகித்தார். 76 வயதான அவருக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், கடந்த 2018ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாநில கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இந்நிலையில், அவருக்கு நேற்று மூச்சுப் பிரச்னை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.