புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று அதற்கான பூமி பூஜை நடக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை இடித்து விட்டு ரூ.861.90 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ‘இதற்கான பூமி பூஜை வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும். பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுவார்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, புதிய நாடாளுமன்றம் கட்டுவதைத் தடை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய நாடாளுமன்றம் கட்ட தடை விதித்துள்ளனர். அதே நேரம், பூமி பூஜைக்கு தடை விதிக்கவில்லை. இந்நிலையில், இன்று பூமி பூஜை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் நேற்று மாலை வரையில் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால், பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில், விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.