நாக்பூர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த சொத்து பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இவரது தாயார் முக்தா பாப்டே. தலைமை நீதிபதி பாப்டே குடும்பத்துக்கு சொந்தமான சீடான் லான் என்ற கட்டிடம், நாக்பூரில் உள்ள ஆகாஷ்வானி சதுக்கம் அருகேயுள்ள அவரது வீடு அருகே அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்படுவது வழக்கம். இந்த சொத்துக்கள் தொடர்பான பண விவகாரத்தை கவனிப்பதற்காக தபாஷ் கோஷ் (49) என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த பணத்தை கோஷ் மற்றும் அவரது மனைவி அந்த கட்டிடத்தின் உரிமையாளர் முக்தாவிடம் வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதற்காக வாடகை தாரர்களுக்கு போலி ரசீது கொடுத்து பணம் பெற்றுள்ளார். இவ்வாறு ரூ.2.5 கோடியை பாப்டே குடும்பத்திடம் ஒப்படைக்காமல் கோஷ் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி அம்பலமானது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கோஷிடம் நாக்பூர் காவல்நிலைய சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இது தொடர்பாக டிசிபி வினிதா சாகு மேற்பார்வையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை நீதிபதியின் தாயார் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.