மதுரை: மதுரை, உத்தங்குடி வள்ளலார் கருணை சபை சாலையின் நிறுவனர் ராமலட்சுமி இளங்கோ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் பலரால் பின்பற்றப்படுகிறது. பல இடங்களில் தர்ம சாலைகள் அமைக்கப்பட்டு இலவசமாக உணவளிக்கப்படுகிறது. வடலூரில் கடந்த 1867 முதல் அணையா அடுப்பு இன்றுவரை பராமரிக்கப்படுகிறது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிக்கக்கோரி ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இதை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதன்படி, 31.7.2019ல் கருத்துக்களை பெறுவதற்காக உயர்மட்ட குழுவை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை உயர்மட்டக்குழு அமைக்கப்படவில்லை. எனவே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பதற்கான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்ட குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.