டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க மத்திய அரசு முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் மாநில அரசுகள் நடத்தும் மண்டி அமைப்பிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தனியாரிடமும் நேரடியாக வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதனால், மண்டி அமைப்பு முறை அழிந்து அந்த அமைப்பு மூலம் உறுதி செய்யப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை தடைபட்டுவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்ப்பெறக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. மேலும், 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க மத்திய அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள விவசாயிகளிடம் வாக்குறுதி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சந்தைகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் எனவும் உறுதி அளிப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.