திருவனந்தபுரம்:தங்க கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி தன்னை சிறைக்கு வந்து சந்தித்த சிலர் கூறியதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொப்னா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா, சரித்குமார் ஆகியோர் சுங்க இலாகாவின் காவலில் உள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை சொப்னா தெரிவித்து வருகிறார். கேரளாவில் உள்ள மிக முக்கிய அரசியல் பிரமுகரும் வெளிநாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டாலர்களை கடத்தினார் என்றும், அவருக்கு நானும் உதவி செய்துள்னேன் என்றும் சொப்னா சுங்க இலாகாவிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘கடந்த மாதம் 25ம்தேதி 4 பேர் என்னை சிறையில் வந்து சந்தித்தனர். அவர்கள் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்க கூடாது என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் என்னை ெகால்ல வாய்ப்பு உள்ளது.எனவே எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் சொப்னாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது.