×

முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2020-ன் வெற்றியாளராக இந்தியாவை அறிவித்தது ஐ.நா.!

ஜெனிவா : 2020 ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருதின் வெற்றியாளராக இன்வெஸ்ட் இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை (வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு) அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெனிவாவில் உள்ள வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.உலகிலேயே மிகச் சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ளும் முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளுக்கு சிறப்பான சாதனைகளை செய்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளின் பணியை ஆய்வு செய்த பிறகு விருதின் வெற்றியாளரை வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு முடிவு செய்கிறது.உலகெங்கிலுமுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளுக்கு கோவிட் பெருந்தொற்று முக்கிய சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றின் கவனம் வழக்கமான முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இருந்து நெருக்கடி மேலாண்மை,  பொருளாதார நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திரும்பியுள்ளது.

இத்தகைய சவாலான காலகட்டத்தில், இவ்விருதை இந்தியா வென்றுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இன்வெஸ்ட் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு தீபக் பாக்லா, இந்தியாவை மிகவும் விரும்பத்தக்க முதலீட்டு மையமாக ஆக்குவதற்கான மாண்புமிகு பிரதமரின் லட்சியத்திற்கான அங்கீகாரமே இந்த விருது என்றார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதையும் இது பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

Tags : UN ,winner ,India , Investment Promotion, Award, Winner, India, Selection, UN, Appreciation
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து