×

திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி- வங்கநகர் இடையே புதிதாக போடப்பட்ட தார் சாலை ஒரே மாதத்தில் பழுதடைந்து சேதம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அருகில் ஓவர்குடி- வங்கநகர் இணைப்புசாலை தார்சாலையாக போடப்பட்ட ஒரே மாதத்தில் சேதம் அடைந்தது. திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அருகில் ஒவர் குடியிலிருந்து வங்க நகர் செல்லும் சாலை வழியாக. வங்கநகர், மாங்குடி, மருதவனம், குலமாணிக்கம், களப்பாள் வழியாக பரவாக்கோட்டை செல்லலாம். மேலும் இந்த பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு குறுக்கு வழியாக விரைவாக வரலாம். இந்நிலையில் இந்த சாலை பொதுமக்கள் நடந்து கூட போக முடியாத அளவிற்கு சேதம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் நபார்டு திட்டத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. மழை தொடங்கியதால் மீதமுள்ள சாலைபணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தார் சாலை போட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சாலைகளின் இருபுறமும் உள்வாங்கியது, போடாத சாலைகளில் கப்பி கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து தற்போது சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேதமான ஒவர் குடி - வங்கநகர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வங்கநகர் ஊராட்சி மன்றதலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஒவர்குடி- வங்கநகர் இணைப்பு சாலை 2.4 கிலோமீட்டர் ரூ 2.61 கோடி நபார்டு வங்கி நிதி உதவியுடன் தார்சாலையாக மாற்ற பணி நடைபெற்று வந்தது.

தற்போது போட்ட தார்சாலையும் போடாத சாலையும் ஒரு மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. சாலையின் இருபுறமும் நீர்நிலைகள் இருப்பதால் சாலை அமைக்கும்போது தடுப்பு சுவர் அமைத்து சாலை போட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த சாலையை பேரிடர் பாதிப்பு திட்டத்தில் சேர்த்தால் தான் புதியசாலை அமைக்க முடியும். பேரிடர் கால இழப்பில் சேர்த்து புதிய சாலை அமைத்து தரவேண்டும். மேலும் வங்கநகர் ஊராட்சியில் நான்கு புறமும் நீரால் சூழ்ந்த பகுதி என்பதால் தொடர் மழையில் 500 ஏக்கர் நீரில் முழ்கியுள்ளது. குடியிருப்புகளிலும் நீர் சூழ்ந்துள்ளது என்றார்.

Tags : road ,Overgudi-Vanganagar ,Thiruthuraipoondi , Thiruthiraipoondi
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...