ராமநாதபுரம்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று 13வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரத் பந்த்-க்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 26ம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 13வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாம்பன் மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் மற்றும் பெண்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதேபோல 2020 மீன்பிடி சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். கைகளில் கருப்புக் கொடி ஏந்திய மீனவர்கள் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். பாம்பன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் ராமநாதபுரத்தை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.