சித்தூர்: திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்தூர் அருகே சித்தூர் டிஎஸ்பி சுதாகர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 103 செம்மரக்கட்டைகள் இருந்தன. இதுகுறித்து லாரியிலிருந்த 6 கூலித்தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சித்தூர் முருக்கம்பட்டு சர்க்கிள் அருகே தாலுகா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார், லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 65 செம்மரக்கட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 65 செம்மரக்கட்டைகள் மற்றும் கார், லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 4.5 கோடி என கூறப்படுகிறது.