×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வகையில் நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுப்பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.  தமிழகத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அரசியல்கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பாமக சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, இந்த கோரிக்கை சம்பந்தமாக தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். இதையடுத்து, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து முதல்வர் முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ள தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், தற்போதைய நிலவரப்படியான சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டியுள்ளது.  இதன் அடிப்படையில், உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என கடந்த 1ம் தேதி உத்தரவிட்டேன்.

தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விபரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் தொடங்கும். சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Commission ,Kulasekara ,announcement ,Palanisamy ,Sativari , Commission headed by Justice Kulasekara to conduct Sativari survey: Chief Minister Palanisamy's announcement
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க...