×

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடையை நீக்க முடியாது: தமிழக அரசு பதில் தர உத்தரவு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஜங்லி கேம்ஸ்’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல எனவும் திறமையை வளர்க்கும் விளையாட்டு என்றும் கடந்த 1968ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும் செலுத்தாமலும் விளையாடலாம். இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே தடை விதிக்கப்பட்டது தவறானது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது என்பதால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu ,government , The ban on online rummy games cannot be lifted: the Tamil Nadu government has issued a response order
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...