செய்யூர்: மதுராந்தகம் அடுத்த நீலமங்கலம் கிராமம் அருகேயுள்ள கிளியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக மதுராந்தகம் பெரிய ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் செல்லும். இந்நிலையில் புயலால் கனமழை காரணமாக மதுராந்தகம் பெரிய ஏரி முழுகொள்ளளவை எட்டியது. இந்நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுபோல் நீலமங்கலம் அருகேயுள்ள வீராணக்குண்ணம், தச்சூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த ஏரிகளின் உபரி நீரும் கிளியாறு தரைப்பாலம் வழியாக செல்கிறது.
இதனால் கிளியாறு தரைப்பாலம் மூழ்கியதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து நீலமங்கலம், சாத்தமங்கலம், பேக்கரணை, குன்னத்தூர், தச்சூர், கீழ்ப்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழை காலங்களில் கிளியாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றவேண்டும் என 30 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்படும் நேரங்களில் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே 15 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.